அபுஷா பீபி மரைக்காயர்
அபுஷா பீபி மரைக்காயர் (Abusha Bibi Marikar, 22 சனவரி 1912 – 8 ஆகத்து 1996) தென்னிந்தியாவின் முதல் இஸ்லாமியப் பெண் மருத்துவர் ஆவார். இவர் நாட்டின் முதல் மகளிர் வாரிய இயக்குநராகவும், சென்னை மாகாண மருத்துவப் பணிகளின் முதல் பெண் இயக்குநராகவும் இருந்துள்ளார்.[1]
பிறப்பு
[தொகு]அபுஷா, சனவரி 22, 1912 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற மரைக்காயர் குழுமத்தின் நிறுவனரான மரைக்காயருக்கும், மரியம் பீபி தம்பதியருக்கும் மூத்த மகளாகப் பிறந்தார். இவருக்கு ஆறு உடன் பிறப்புகள்.[2]
மருத்துவப் படிப்பு
[தொகு]திருவனந்தபுரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அபுஷா மேற்படிப்பை சென்னையிலுள்ள இராணி மேரிக் கல்லூரியில் முடித்துள்ளார். இவரது அறிவியல் ஆர்வம் காரணமாக 1929ஆம் ஆண்டு மதராசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இங்குள்ள முஸ்லிம் அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் காந்தியவாதியான தந்தையின் வழிகாட்டலில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே சுதேசி போராட்டத்தில் கலந்து கொண்டார். 1937ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த அபுஷா, 1938ஆம் ஆண்டு மகப்பேறு மருத்துவ மேல்படிப்பை முடித்தார். இவர் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பில் லாசரஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.[3]
மருத்துவப்பணிகள்
[தொகு]1939ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவராகச் சேர்ந்த அபுஷா, ஜபல்பூர் எல்ஜின் மருத்துவமனை, தில்லி லேடி ஹார்டின் மருத்துவமனை, லாகூர் லேடி அட்சின்சன் மருத்துவமனை என நாட்டின் பல்வேறு மகளிர் மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.[1]
1948ஆம் ஆண்டு மகளிர் மருத்துவப்பணிகள் துறை ஒழிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு அபுஷா மதராசு மருத்துவப்பணிகள் குடிமை அறுவை மருத்துவர் பதவியில் அமர்த்தப்பட்டார். கூடுதலாக ஆந்திரா மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றிவந்தார்.
மதராsu மாகாணத்திலிருந்து ஆந்திர மாநில எல்லை மறுவரைவுச் செய்யப்பட்ட பிறகு,1954 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1960ஆம் ஆண்டு அரசுப் பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளராகவும் மதராசு மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1961ஆம் ஆண்டு மருத்துவப் பணித்துறையின் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். 1968ஆம் ஆண்டு தமிழக அரசு உடல்நல மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநரை மாற்றியமைத்தது. இதன் காரணத்தால் இந்த பதவியில் அமர்ந்த முதல் பெண்ணானார் அபுஷா.
1958ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ மகளிர் கூட்டத்தில் இந்தியா சார்பாகப் பங்கேற்றார். 1964ஆம் ஆண்டு ‘போர்ட் அறக்கட்டளை’ நிதியுதவியுடன் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்தவர், அங்குள்ள மகளிர் நலம், குடும்பக் கட்டுப்பாடுகளின் முறைகளைக் குறித்து ஆய்வு செய்தார். 1965ஆம் ஆண்டு 18வது உலக சுகாதாரக் கூட்டத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சருடன் இணைந்து இவர் கலந்து கொண்டார்.
அபுஷா துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். மதுரை எர்ஸ்கைன் மருத்துவமனையில் குழந்தைகள் அறுவைசிகிச்சைப் பிரிவு இவரின் திட்டமிடலால் ஏற்படுத்தப்பட்டது.[3]
ஆண்டு | துறைகள் | பதவி/ பொறுப்பு |
1961 | மருத்துவப் பணித்துறை | இயக்குநர் |
1968 | உடல் நல மற்றும் குடும்ப நலத்துறை | இயக்குநர் |
1992 | இந்திய செஞ்சிலுவைச் சங்கம் | வாழ்நாள் தலைவர் |
1993 | தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் | தலைவர் |
இறப்பு
[தொகு]சென்னை எழும்பூர் மான்டியத் சாலையிலுள்ள ‘சிராக்’ பங்களாவில் வசித்துவந்த அபுஷா 1996 ஆகத்து 8 அன்று தனது 84-வது வயதில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 SL Bhatia History of Medicine Museum (2025-04-26). "The Firsts: Life Sketches of Medical Women in India". SL Bhatia History of Medicine Museum. Retrieved 2025-04-26.
- ↑ "Dr Abusha Bibi Marikar". geni_family_tree (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-01-01. Retrieved 2025-04-15.
- ↑ 3.0 3.1 SL Bhatia History of Medicine Museum. The Firsts: Life Sketches of Medical Women in India. SL Bhatia History of Medicine Museum. SL Bhatia History of Medicine Museum.
- ↑ "Habeeb Marikar". geni_family_tree (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-04-26. Retrieved 2025-04-26.